Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12068
Title: வேலன்: ஆதிப் புலமையாளனின் வரலாற்றைத் தேடுதல்
Authors: Govindarajan, N.
Keywords: வேலன்;பூசாரி;சிந்துவெளி முத்திரைகள்;வாக்கு;ஒலி;புலவர்கள்;ஆஸ்கோ பர்ப்போலா;ஐராவதம் மகாதேவன்
Issue Date: 2022
Publisher: Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract: சங்ககாலச் சமூகத்தில் வேலனுடைய இடம் நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாக இருந்தது என்பதைச் சங்கப் பாடல்களைப் படிக்கும்போது தெரிந்துகொள்ளமுடிகிறது. 'வெறியாட்டு', 'முருகு புணர்தல்', 'அணங்கு', 'குறி கேட்டல்' எனக் குறிக்கப்படும் பண்டைத் தமிழர்களின் வழிபாட்டு மரபுகளில் வேலன் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தான். அவர்களின் அன்றாட வாழ்வில் பூசாரியாக, வருவது உரைப்பவனாக, யோசனை கூறுபவனாக, நோய் தீர்ப்பவனாக, தெய்வத்துடன் பேசுபவனாக முன்னோர்களுடன் தொடர்புகொள்பவனாக வேலன் பல நிலைகளில் செயல்பட்டுள்ளான். இப்படித் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருந்த வேலனின் வரலாற்றை எழுதுவதற்குப் போதிய முழுமையான தரவுகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் கொடுக்கவில்லை. வேலனின் வரலாற்றை எழுதுதல் என்பது தமிழ்ச் சமூகத்தில் மறந்தும் மறக்கடிக்கப்பட்டும் போன ஒரு வழிபாட்டு மரபைத் தேடுதலுக்குச் சமமானது. வேலனின் வரலாற்றைக் கால வரிசைப்படி எழுதுதல் இயலாத காரியம். வேலனுக்கு என்று தனி வரலாறு இல்லை. வாய் மொழியாகக் கூட வேலனைப் பற்றிய பழம் மரபுகள் அதிகம் இல்லை. அரசர்கள் பற்றியும், அவர்கள் வழங்கிய கொடைகள் பற்றியும் கிடைக்கும் கல்வெட்டுகள் போன்ற சான்றுகள்கூட வேலனுக்கு இல்லை. அரசர்கள், தாங்களே எழுதிக்கொண்ட அல்லது அவர்களுக்காகப் பிறர் எழுதிய செப்பேடுகளில் காணப்படுகின்ற குடி வழி - வம்ச வரலாறு - தோற்றம் போன்ற கட்டமைக்கப்பட்ட வரலாறும் வேலனுக்கு இல்லை. அப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களிலும் அவன் பெயரளவில்கூட இடம்பெறவில்லை. தமிழகத்தின் வரலாறற்ற ஆதிப் பூசாரியைத் தேடுவதற்கு வரலாற்றின் இயல்பான நியமங்களைக் கடந்துபோக வேண்டியுள்ளது. வரலாற்றைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் சங்க இலக்கியச் சொற்கள், தொடர்கள் ஆகியவற்றையும், சங்கப் பாடல்கள் குறிப்பிடும் தொன்மங்கள் ஆகியவற்றையும், சிந்துவெளி முத்திரைகள், குறியீடுகள் ஆகியவற்றையும், அதிகம் பேசப்படாத, காலப்போக்கில் மறைந்துபோன தமிழகச் தமிழகச் சமயங்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றையும் பயன்படுத்தி இக்கட்டுரை வேலன் வரலாற்றை எழுத முயற்சி செய்கிறது. வேலனின் வரலாற்றை, மரபான வரலாறு எழுதுகைக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரையறைகளைக் கடந்து, தொன்மங்கள் வழியாக ஒருவாறு அனுமானித்துச் சிந்துவெளி குறியீடுகள் துணைகொண்டு கட்டமைக்கிறது இக்கட்டுரை. சிவன், அகத்தியர் எனப் பலவாறு வாசிக்கப்பட்டு வந்த சிந்துவெளி முத்திரைகளைச் சங்க இலக்கியங்கள் மூலம் கிடைக்கும் தரவுகள் கொண்டு வேலனாகவும் வாசிக்கலாம் என்று இக்கட்டுரை முடிவு தந்துள்ளது. வழிவழியாகக் கருதப்பட்டு வந்த முருகனின் பூசாரி வேலன் என்ற கருத்தாக்கத்தை மாற்றி வேலன் என்பவன் தொல் தமிழகத்தின் ஆதி ஆசிரியனாக இருக்கிறான் என்பதை நிறுவ முயற்சி செய்துள்ளது இக்கட்டுரை. அந்த வகையில் சங்க இலக்கியத்தின் வரலாற்றுத் தன்மையும் சிந்துவெளி நாகரிகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள சங்க இலக்கியத்தின் இன்றியமையாமையும் இந்தச் சிறு ஆய்வு புலப்படுத்தி நிற்கிறது. வேலனின் தொல் படிமங்களை ஆராய பெருமளவு சிந்துவெளிக் குறியீடுகள் உதவுகின்றன என்பதும் இக்கட்டுரை மறைமுகமாக வலியுறுத்த விரும்பும் குறிப்பாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12068
Appears in Collections:2022



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.